Friday, February 14, 2025
Homeகல்விஇளம் சமுதாயத்தினரிடையே சமூகமயமாக்கலின் முக்கியத்துவம்

இளம் சமுதாயத்தினரிடையே சமூகமயமாக்கலின் முக்கியத்துவம்

இளம் சமுதாயத்தினரிடையே சமூகமயமாக்கலின் முக்கியத்துவம்.

‘இன்றைய சிறுவர்களே நாளைய சமுதாயத்தினர்’ என்பதற்கமைவாக பிள்ளைகளின் வாழ்வில் சமூகமயமாக்கலின் வகிபங்கு அவசியமானதொன்றாகும். அந்தவகையில் சமூகமயமாக்கல் என்பது சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது தொடர்பாகக் கற்றுக்கொள்வதாகும். அதாவது மற்றவர்களுடனான நமது தொடர்புகளை நிர்வகிக்கும் சமூக விதிமுறைகள், மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளல் என்பவை இவற்றுள் உள்ளடங்குகின்றது. பிறப்பு முதல் கொண்டு இறப்பு வரை சமூகத்தினுடன் இணைந்து வாழும் மனிதன் தொடர்ச்சியாக சமூகமயமாக்கல் செயன்முறைகளில் ஈடுபட்ட வண்ணமே உள்ளான். சமூகமயமாக்கலானது குறித்த ஒரு வயதின் ஆரம்பத்தில் மாத்திரமன்றி இறக்கும் வரையில் கூடியும் குறைந்தும் நிகழும் ஓர் ஆயுற்காலத்தொழிற்பாடாகும்.

அந்தவகையில் சமூகமயமாக்கல் மனித வாழ்வில் இடம்பெறும் சந்தர்ப்பங்களாக குழந்தைப்பருவம்- குடும்பம், பிள்ளைப்பருவம் – பாடசாலை, அயலவர், கட்டிளமைப்பருவம் – சமவயதுக்குழுக்கள், வளர்ந்தோர் – ஊடகம், நண்பர்கள் மற்றும் முதியோர் – ஊடகம் என்று ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு சமூகமயமாக்கல் முகவர்களுடன் தொடர்புறுவதைக் குறிப்பிட முடியும். இவற்றுள் குழந்தை பருவம் மற்றும் பிள்ளைப் பருவத்தை பொருத்தமட்டில், எமது சுய உணர்வை உருவாக்கி, புதிய உலகிற்குள் தடம்பதிக்க கற்றுக் கொள்ளும்போது இந்த சமூகமயமாக்கல் மிகவும் அவசியமானதொன்றாகின்றது
.

பிள்ளைகளுக்கு சமூகமயமாக்கல் ஏன் அவசியம்? என வினவும்போது பின்வரும் அம்சங்கள் அவற்றை வலுப்படுத்தி நிற்கின்றன. சமூகமயமாக்கல் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் உறவுகளுக்குத் தேவையான தகவல் தொடர்பு திறன்களைப் பெறுவதற்கு பிள்ளைகளுக்கு உதவுகிறது. மேலும் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் பிள்ளைகள் தங்களை தாமே கவனித்துக் கொள்ளவும், புரிந்துகொள்ளவும், திறம்பட தன் திறனை வெளிப்படுத்தவும் கற்றுக்கொள்கிறார்கள். இதன்போது தகவல்தொடர்பு திறன்கள் வாய்மொழி மற்றும் சொற்கள் அல்லாத தொடர்பு உட்பட பல்வேறு வடிவங்களில் வருகின்றன. மேலும் பல்வேறு வகையான தொடர்பு திறன்களை வளர்ப்பதால் அவை பிள்ளைகளுக்கு பல்வேறு வாழ்க்கை நிலைகளில் முன்னேறும்போது பயனளிப்பதாக அமையும்.

சமூகமயமாக்கல் பிள்ளைகளை தன்னம்பிக்கையுடையவராகவும், சுதந்திரமான தனிமனிதனாகவும் இருக்க உதவும் அதேசமயம் திறன்களை வளர்க்கவும் அனுமதிக்கிறது. அதாவது, தமது கருக்குடும்பத்திற்கு வெளியே உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் நிச்சயமற்ற நிலையிலும் கூட குழந்தைகள் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வர் எனலாம்.

உதாரணமாக முன்பள்ளியின் முதல் நாள் குழந்தையை பொறுத்தமட்டில் ஒரு பெரிய மற்றும் பயமுறுத்தும் சூழலாக இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் அச்சூழலே மீள்தன்மை மற்றும் தன்னம்பிக்கை கொண்ட குழந்தைகள், புதிய செயல்களில் ஈடுபடுவது அல்லது அந்நியரை அணுகுவது போன்ற ஆரோக்கியமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குமான வாய்ப்புகளையும் அதிகம் தோற்றுவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்கு சமூகமயமாக்கல் பகிர்ந்துகொள்ளும் பண்பினைக் கற்றுக்கொடுக்கிறது. மற்றும் அவர்களைக் குறைவான தன்னலமற்றவர்களாக மாற்றுவதற்கும் வழிவகுக்கின்றது. சிறு குழந்தைகளில், குறிப்பாக முதல் அல்லது ஒரே வயது குழந்தைகள் சுயநலமாக இருப்பது ஒரு பொதுவான போக்காகும். ஏனெனில் அவர்களின் மனம் அவர்கள் பார்க்க முடியாததை அல்லது கற்பனை செய்ய முடியாததை விட அவர்கள் பார்க்கக்கூடியதைச் சுற்றியே சுழல்கிறது. இதனடிப்படையில் சமூகமயமாக்கல் குழந்தைகளை மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும், வளங்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் ஊக்குவிக்கிறது, மேலும் இது பெரியவர்களின் ஆக்கப்பூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் சிந்திக்கும் திறனில் பங்கு வகிக்கின்றது. கூடுதலாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், தொடர்புகொள்ளவும் பிள்ளைகள் மற்றும் மக்கள் மத்தியில் நண்பர்களை உருவாக்க உதவுகிறது. மற்றும் இது குழந்தையின் உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியமானவொன்றாகும்.

சமூகமயமாக்கலில் பச்சாதாபம் ஒரு முக்கியமான பண்பாகும், ஏனெனில் இது பிள்ளைகளை மற்றவர்களிடம் அன்பாவாகவும் அக்கறையுடனும் இருக்க உதவுகிறது. முன்பு கூறியது போல், சமூக தொடர்பு என்பது பேசுவது மட்டுமல்ல, கேட்பது, கவனிப்பது மற்றும் பதிலளிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது. அந்தவகையில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவுவதைக் கவனிப்பது அல்லது தவறாக நடத்தப்படும் ஒருவருக்கு ஆதரவாக நிற்பது என்பது பச்சாதாபத்தின் இன்றியமையாத பாடமாகும். இது சமூகத் தொடர்பு மூலம் மட்டுமே கற்பிக்கப்படும். எதிர்காலத்தில் பச்சாதாபமுள்ள பிள்ளைகள் மிகவும் சகிப்புத்தன்மையுடையவராகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும், மீள்தன்மையுடனும் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் மோதலை எதிர்கொள்வதற்கும், தொடர்புகொள்வதற்கும், புதிய சூழலில் நேர்மறையாக ஒருங்கிணைப்பதற்கும் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்பவர்களாக காணப்படுவார்கள்.

‘தோல் கொடுப்பான் தோழன்’ என்ற வகையில் பிள்ளைகளுக்கு நண்பர்களை உருவாக்கிக் கொள்ள சமூகமயமாக்கல் மிக மிக அவசியம். அதாவது ஒருவரின் சொற்களஞ்சியத்தை விரிவுபடுத்துதல், பலதரப்பட்ட சிந்தனை முறைகளை வளர்த்தல் மற்றும் நீடித்த நினைவுகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நண்பர்கள் அவசியமாகின்றனர். மேலும் நண்பர் குழாமினர் இவர்களுக்கு கற்றுக்கொண்டதை விவாதிக்கவும் வலுப்படுத்தவும் இவர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தருகின்றனர் .

இதன் மூலம் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான காலக்கட்டங்களில் உதவி மற்றும் ஆதரவை பெற்றுக்கொள்ளவும் முடிகின்றது. இவ்வாறு வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நண்பர்கள் எமது சமூக வலைப்பின்னலின் அடித்தளமாக உள்ளனர். மேலும் இவ்வகை சமூகமயமாக்கல் தொடர்பு மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

இவ்வாறு பல்வேறு வகையில் மாணவர் சமூகமயமாக்கலுக்குட்படுவது வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகும். இது வேடிக்கை மற்றும் நண்பர்களை உருவாக்குவதற்கான ஒரு வழி மட்டுமல்ல, தனிப்பட்ட மற்றும் கல்வி வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாகவும் உள்ளது. சமூகமயமாக்கல் என்பது மாணவர்கள் தங்கள் சமூக திறன்களை வளர்த்துக் கொள்ளவும், மேம்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். சமூக தொடர்பு மூலம் மாணவர்கள் எவ்வாறு திறம்பட தொடர்புகொள்வது, மற்றவர்களுடன் பச்சாதாபம் கொள்வது மற்றும் மோதல் பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளலாம். இந்த திறன்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக வலுவான உறவுகளை உருவாக்குவதற்கு அவசியமானதோடு இவை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையின் வெற்றிக்கும் மிக முக்கியமானவையாகும்.

சமூகமயமாக்கல் பல்வேறு பின்னணிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களுடன் பழகுவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பங்களினை ஏற்படுத்தி தருகின்றது. இவ்வழிவகைகள் வெவ்வேறு கண்ணோட்டங்கள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்க்க மாணவர்களுக்கு உதவும். மேலும் அவர்கள் பல்வேறு பின்னணிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களுடன் பழகக் கற்றுக்கொள்கிறார்கள். இது மக்களிடையே இருக்கும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளவும் பாராட்டவும் உதவுகிறது. இது மாணவர்களின் சமூக நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இவ்வாறு மற்றவர்களுடன் பழகுவதும், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மூளையைத் தூண்டி மனச் சுறுசுறுப்பை மேம்படுத்துகிறது. சமூகமயமாக்கல் விமர்சன சிந்தனை திறன், படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்க்க உதவுகிறது. இது மாணவர்களை வெறுமனே கூட்டத்தைப் பின்தொடர்வதை விட, சுயாதீனமாக சிந்திக்கவும், தங்கள் சொந்த தீர்மானத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவும் ஊக்குவிக்கிறது.

மற்றும் சமூகமயமாக்கல் மாணவர்களுக்கு குழு திட்டங்களில் ஒன்றாக வேலை செய்யவும், குழு விளையாட்டுகளில் பங்கேற்கவும் மற்றும் பிற கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்புகளை வழங்குகிறது. குழுக்களில் பணிபுரிவது மாணவர்கள் பன்முகத்தன்மையின் மதிப்பைப் பாராட்டவும் வெவ்வேறு நபர்களின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. நாம் பழகும் விதம் நமது உறவுகள், நடத்தை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, சமூகமயமாக்கல் இளம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ஏனெனில் இது தகவல் தொடர்பு திறன், தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரம், பகிர்ந்து கொள்ளும் திறன், பச்சாதாபம் மற்றும் நட்பு ஆகியவற்றை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் சமூகமயமாக்கல் குழந்தைகளின் மன, உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வில் அவர்களின் வாழ்நாள் முழுவதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆதலால் சமூகமயமாக்கலினை பிள்ளைகளிடையே பெற்றோரும் பராமரிப்பாளர்களும் சிறு வயதிலிருந்தே ஊக்குவிப்பது இன்றியமையாததாகும்.

த.பிரவீனா
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Svetlcov on what is the Voyager 2
M.I Hamdha on 🎨 Art By Aysha Amal